

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜீலம் நதியில் வெள்ளத்தின் அளவு சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தெற்கு காஷ்மீர், ஸ்ரீநகர், ஜம்முவின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். வெள்ளத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் நேற்று முன்தினம் 16 பேர் உயிரிழந்தனர். நேற்று பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் மழையின் தீவிரம் தணிந்ததால், ஜீலம் நதியில் சுமார் 6 அடி உயரத்துக்கு வெள்ளத்தின் அளவு குறைந்தது. நேற்றைய நிலவரப்படி சங்கம் பகுதியில் வெள்ளத்தின் அளவு 16.45 அடியாக இருந்தது.
இதனிடையே, புதன்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி களில் லேசானது முதல் மித மான மழை பொழியக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெள்ளபாதிப்பு இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதால் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி களில், பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் பல்கலைக் கழக தேர்வுகள் திட்ட மிட்டபடி இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது:
“கடந்த முறை போன்று நிலமை அவ்வளவு மோசமாக இல்லை. இருப்பினும் நாங்கள் எச்சரிக்கையாகவே இருக் கிறோம். தேவைப்பட்டால் கூடுதல் உதவிகளை அளிக்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.
உடல்கள் மீட்பு
இதனிடையே புத்காம் மாவட்டம் லேடன் கிராமத்தில் வீடுகள் இடிந்து புதையுண்ட 16 பேரில் 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உதம் பூரில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.