

அந்தோனிசாமி, லாசர் குமார், ஜான்ரோஸ் பீட்டர்
பெங்களூரு: கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது.
இங்குள்ள தோமையார்பாளையம் அருகே சிலர் சட்ட விரோதமாக மான்களை வேட்டையாடுவதாக நேற்றுமுன்தினம் இரவு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷிவராஜ், சேகரையா, அனில்குமார் உள்ளிட்ட 7 பேர் இரு குழுக்களாக பிரிந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது, மறைந்திருந்த 4 தமிழர்கள், அவர்கள் மீது நாட்டு துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொள்ளேகால், ஹனூர், தோமையார் பாளையம், ஜகன்னாத தொட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
போலீஸார் குவிப்பு
இந்த சம்பவத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் மைசூரு, மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 பேரின் உடல்களும் மைசூரு கே.ஆர்.மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர்கள் நடத்திய தாக்குதலில் வனத்துறையை சேர்ந்த ஒருவர் காயமடைந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
‘மாடு மேய்க்க சென்றார்கள்’
கொள்ளேகாலில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்க சென்றவர்கள். இரவில் வனப்பகுதியிலே தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகப்பட்டு வனத்துறையினர் நெஞ்சு பகுதியில் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.
உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.