

புனே: மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
மும்பை, புனே, தானே மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. புனே மாவட்டத்தின் மாவல் தாலுகாவுக்கு உட்பட்ட பாட்டன் கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில், தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகளும் மண்ணும் குடியிருப்புப் பகுதிக்குள் சரிந்து விழுந்தது.
இதில் சுமார் 5 வீடுகள் முற்றிலும் இடிபாடுகளுக்குள் புதைந்தன. தூங்கிக் கொண்டிருந்த 30-க்கும்மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் சிறப்பு மீட்புப் படை, மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நந்து திக்கோனே (60), மௌலி திக்கோனே (30), அனிதா திக்கோனே (55) ஆகிய மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக லோனாவாலா பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் கஜானன் தோம்பே தெரிவித்துள்ளார்.