கொட்டித்தீர்க்கும் மழை: மும்பையில் 19 செ.மீ.; நவ்சாரியில் 21 செ.மீ.

கொட்டித்தீர்க்கும் மழை: மும்பையில் 19 செ.மீ.; நவ்சாரியில் 21 செ.மீ.
Updated on
2 min read

மேற்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மும்பையில் 24 மணிநேரத்தில் 19 செ.மீ. மழையும், குஜராத் மாநிலம் நவ்சாரியில் 12 மணிநேரத்தில் 21 செ.மீ. மழையும் கொட்டித் தீர்த்துள்ளது.

மும்பையில் இரண்டு வாரங்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது. நகர் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஆண்டுதோறும் ஜூன் 10-ம் தேதிக்கு முன்பாக தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கேரளா உட்பட பிற மாநிலங்களிலும் பருவமழை தாமதமாகவே தொடங்கியது.

இதனால், இரண்டு வாரங்கள் தாமதமாக அங்கு நேற்று பருவமழை தொடங்கி உள்ளது. மும்பையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மும்பையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை முடிந்த 24 மணிநேரத்தில் மும்பை மாநகராட்சி பகுதிகளில் 12.7 செ.மீ. மழையும், மும்பை புறநகர் மேற்கு பகுதியில் 17 செ.மீ மழையும், மும்பை புறநகர் கிழக்கு பகுதியில் 19.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. இதனிடையே அடுத்த 2 தினங்களுக்கு மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மும்பை மட்டுமின்றி புனே உட்பட மற்ற நகரங்களிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நவ்சாரியில் 12 மணிநேரத்தில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in