

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்க டேஸ்வரா உயிரியல் பூங்காவில் விலங்குகள் தொடர்ச்சியாக உயிரிழப்பதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய உயிரியல் பூங்காவா கும். அலிபிரி பை-பாஸ் சாலையில் 5,532 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பூங்காவில் வெள்ளைப்புலி, சிங்கம், சிறுத்தை, புலி, கரடி, யானை உட்பட பல வகை மிருகங்கள், பறவைகள் உள்ளன.
ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒட்டகச் சிவிங்கி, சிங்கம் மற்றும் வெள்ளைப்புலி குட்டி ஆகியவை உடல் நலம் குன்றி உயிரிழந்தன. இதற்குக் காரணம் நிரந்தரமாக விலங்குநல மருத்துவர்களை நியமிக்காததுதான் என குற்றம்சாட்டப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அதிகாரி ஸ்ரீநிவாசுல ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த உயிரியல் பூங்காவில் 87 விதமான 1,110 விலங்குகள், பறவை இனங்கள் உள்ளன. இங்கு 157 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் நிரந்தரமான விலங்குநல மருத்துவர் இல்லை. 3 விலங்கு மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டி அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என்றார்.