சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு எதிரான கர்நாடக மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு எதிரான கர்நாடக மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Updated on
2 min read

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரிய கர்நாடக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ‌ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என அறிவித்தது.

வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்படுகிறது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவித்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த‌ 21-ம் தேதி கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆச்சார்யா, ஜோசப் அரிஸ்டாடில் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தன‌ர். அதில், “ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தார். இந்த தீர்ப்பை மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் ஜெயலலிதா மீதான வழக்கை முடித்து வைத்தது சரியான முடிவல்ல. ஏனென்றால் குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணையின்போது இறந்தால் மட்டுமே அவர் மீதான வழக்கை கைவிட முடியும். ஆனால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, இவ்வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த‌ டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். உச்ச நீதிமன்ற விதிமுறைகள் - 2013 மற்றும் அரசமைப்பு சட்டத்தின்படி அவரது பெயரை தீர்ப்பில் இருந்து விடுவிக்க முடியாது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததன் மூலம் ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது. ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது. அதே வேளையில் குற்றவாளி என்ற முறையில் அவ‌ருக்கு சொந்தமான சொத்துகளை ஏலம் விட்டு ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க முடியும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பொது ஊழியரிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என ஊழல் தடுப்பு சட்டமும் கூறுகிறது. எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து, அபராதத்தை வசூலிக்க வழிக்காட்ட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

சேம்பரில் விசாரணை

சீராய்வு மனு என்பதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோரது சேம்பரில் இம்மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் கர்நாடக அரசின் கோரிக்கைகள் ஏற்புடையது அல்ல என்று கூறி, தீர்ப்பின் மீதான கர்நாடக அரசின் சீராய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதன் மூலம் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான மேல்முறையீட்டு வழக்கு கைவிடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள் ளது. எனவே ரூ.100 கோடி அபராதத்தை, ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விட்டு வசூலிக்கக் கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம். எனினும் சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திவிட்டு, இவ்வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

சட்ட நிபுணர்கள் கருத்து

கர்நாடக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறி ஞரும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான வீ.கண்ணதாசன்:

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் கீழ்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே உறுதி செய்துள்ளது. அதில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என தெளிவாக தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை மட்டும் வசூலிப்பதா, வேண்டாமா என எதுவுமே சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டனர். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டனர் என்றே கருதுகிறேன்.

திமுக வழக்கறிஞரும், உயர் நீதிமன்ற முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பி.வில்சன்:

நீதிபதி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதன்படி, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் தண்டனை அனுபவித்திருக்க வேண்டும். ரூ.100 கோடி அபராதத்தையும் கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் தற்போது உயிருடன் இல்லை. வழக்குக்குட்பட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை முடக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

ஒருவேளை இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், நாளைக்கே சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேரும் சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள். அதையும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in