Published : 23 Dec 2013 12:43 PM
Last Updated : 23 Dec 2013 12:43 PM

செம்மரக் கடத்தல் கும்பலை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய 17 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சித்தூரை அடுத்த கலிகிரி மலை யில் ஞாயிற்றுக்கிழமை 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றது. இதைக் கண்ட பத்தரவாரிபல்லி, கொத்தூர் கிராம பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்று 3 பேரை பிடித்து பூதலப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தப்பி ஓடிய மற்ற 17 பேரைப் பிடிப்பதற்காக சேஷாசலம் வனப்பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து தினமும் பல்வேறு வாகனங்களில் செம்மரங்கள் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான தேடுதல் வேட்டையின்போது, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வன மற்றும் போலீஸ் துறையினரிடம் பிடிபட்டு கைதாகி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 2 வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் ஆகியோரை செம்மர கும்பல் மிக கொடூரமான முறையில் கொலை செய்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, வனத்துறையினருக்கு ஆயுதங்களை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

மர்ம நபர்கள் சிலர் சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து கொண்டு கடத்தல் தொழிலை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இதில் வனத்துறை ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x