பாபர்மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி, உமா பாரதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

பாபர்மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி, உமா பாரதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
Updated on
1 min read

பாபர்மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகினர்.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கர சேவகர்களை தூண்டியதாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அத்வானி உள்ளிட்டோர் மீது ரேபரேலி மற்றும் லக்னோவில் தொடரப்பட்ட 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் விசாரிக்குமாறு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 4 வாரத்துக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தினமும் விசாரணை நடத்தி 2 ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கடந்த 20-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் இன்று (மே 30-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பாபர்மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகினர்.

அவர்களுடன் பாஜகவின் வினய் கட்டியார், இந்துத்துவா பிரச்சாரகர் சாத்வி ரிதம்பரா ஆகியோரும் ஆஜராகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in