

மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மற்றும் தமுமுக பொருளாளர் ஹைதர் அலி ஆகியோர் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை லக்னோவில் திங்கள் கிழமை சந்தித்தனர்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர் களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:
ஒடிசா புயல் மற்றும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டியது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தமுமுக ஏற்கெனவே செய்துள்ளது.
முஸாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், ஐம்பது குடும்பங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு இழப்பீடு அளிக்கப் படவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாகவும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கொடுத்துள்ள மனுவில் குறிப் பிட்டுள்ளோம்.
உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்காக தமிழ கத்தில் சிறுபான்மையினருக்கு உள்ள இட ஒதுக்கீடு குறித்து அகிலேஷ் கேட்டறிந்தார்.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் நூறு வீடுகள் கட்டிக்கொடுக்க தமுமுக திட்டமிட்டுள்ளது. அதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும் என அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.
கலவரத்தில் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கான இழப்பீடு தொகை, இறந்து போனவர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தித் தர வேண்டும்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு அரசிடம் இழப்பீடு பெற்றவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடம் சென்றால் அரசு அளித்த இழப்பீட்டு தொகை திருப்பித் தரப்பட வேண்டும் என்ற உ.பி. அரசின் அரசாணைகள் திரும்ப பெறப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம் என்றார் ஜவாஹிருல்லா.