சோனியா, ராகுலுக்கு எதிராக பிரச்சாரம்: ராம்தேவ் அறிவிப்பு

சோனியா, ராகுலுக்கு எதிராக பிரச்சாரம்: ராம்தேவ் அறிவிப்பு
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

டெல்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக, ராகுலின் அமேதி தொகுதியிலும், சோனியாவின் ரே பரேலி தொகுதொதியிலும் தான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் அவர்கள் தோல்வியை உறுதி செய்ய இருப்பதாகவும் ராம் தேவ் தெரிவித்தார்.

அதே வேளையில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும், மோடி பிரதமராக தனது வாழ்த்துகளை உரித்தாக்குவதாகவும் கூறினார். இருப்பினும் தனது ஆதரவு மோடி என்ற தனிப்பட்ட நபருக்கானது தானே தவிர பாரதீய ஜனதா கட்சிக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

2014 தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்றார். சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா நில அபகரிப்பில் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளதாகவும், காங்கிரஸ் வெளியேறிய பிறகு இக்குற்றத்திற்காக ராபர்ட் வதேரா சிறை செல்வது நிச்சயம் என்றும் ராம்தேவ் தெரிவித்தார்.

அரசியலுக்கு எப்போதும் வரமாட்டேன், தேர்தலில் ஒரு போதும் போட்டியிட மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in