

ஆந்திர மாநில அரசு தற்போது வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதன் மூலம் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரவும், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கவும், இதர அரசு நலத்திட்டங்களை தகுதியான வர்களுக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்புக்கான விண்ணப்பத்தில் 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனை அனைவரும் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் போலி ரேஷன் அட்டைகள், சமையல் எரிவாயு இணைப்பு போன்றவையும் தெரிய வரும் என அரசு எதிர்பார்க்கிறது.
இந்த கணக்கெடுப்பு முதலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டில் தொடங்கியது. அப்போது அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேற்று திருப்பதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமாநாயுடு தலைமையில் அக்கட்சியினர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘எங்கள் முதல்வருக்கு சொந்த வீடு கூட இல்லை என்பதை அறிந்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். ஏழையான அவர், எங்கள் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு திருப்பதி யில் அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி, அதில் அவருக்கு அரசே வீடு கட்டி தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்” எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.