

தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரத்தை மத்திய அரசு எப்படி வேறு பணியில் அமர்த்த முடியும்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் லோக்கூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ‘தமிழக அரசுக்கு அனுப்பிய பல கடிதங்களுக்கு பதில் அனுப்பாததால், மத்திய அரசு பணியில் சேரும்படி அர்ச்சனாவுக்கு உத்தரவிடப்பட்டது. அப்பணியை மேற்கொள்ள அர்ச்சனாவுக்கு நீதி மன்றம் தடை விதித்து விட்டதால், அவர் எந்த வேலையும் செய்ய முடியாமல் இருக்கிறார். தமிழக அரசு சஸ்பெண்ட் செய்த உத்தரவை எதிர்த்து அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். தற்போது குழப்ப மான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவரை வேறு பணியில் அமர்த்த அனுமதிக்க வேண்டும். அவரை வேறு பணியில் அமர்த்திவிட்டால், இந்த வழக்கு முடிவுக்கு வந்து விடும்’ என்றார்.
மத்திய மாநில உறவு
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘இந்த விவகாரம் தனிப்பட்ட அதிகாரி என்பதற்கு மேலாக மத்திய மாநில அரசுகளின் உறவு விவகாரமாக அமைந்துள்ளது. மேலும், அர்ச்சனா ராமசுந்தரம் தற்போது தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளார். அவரை வேறு பணியில் மத்திய அரசு அமர்த்த முடியாது’ என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், சஸ் பெண்ட் செய்யப்பட்ட அதிகாரியை எப்படி வேறு பணியில் அமர்த்த முடியும்? என்று அட்டர்னி ஜெனர லிடம் கேள்வி எழுப்பினர். அர்ச்சனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, தற்போதைய நிலை குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
குழு பரிந்துரைக்காத நபர்
அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப் பட்டதை எதிர்த்து பொது நல மனு தாக்கல் செய்த வினீத் நாராயண் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘சிபிஐ உயர் பதவிகளுக்கு அதிகாரியை நியமிக்கும் முன், அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரையை ஏற்க வேண்டும். ஆனால், குழு பரிந்துரைக்காத ஒருவரை நியமிப்பது மத்திய அரசின் வாடிக்கையாக உள்ளதால், இதற்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்ட வேண்டும்’ என்று வாதிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 2-ம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.