

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) 2% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தை மாற்றி அமைக்கிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது 55-லிருந்து 58% ஆக உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் நிலுவைத் தொகையுடன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைந்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 2% உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 8-வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியக் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்ய ஊழியர் சங்கங்களிடம் இருந்து கோரிக்கை வந்த நிலையில் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது.
பிட்மென்ட் காரணியை 3.83 சதவீதமாகவும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து 69 ஆயிரமாகவும் உயர்த்த ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஊதியக் கணக்கீடுகளுக்கான ‘குடும்பம்' என்பதன் வரை யறையை பெற்றோர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தவும் முன்மொழிந்துள்ளன.
மேலும் இந்தியாவுக்கு வரும் மற்றும் இந்தியாவில் இருந்து புறப்படும் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கு நிலையான மற்றும் மலிவான காப்பீட்டு பாதுகாப்பை வழங்குவதற்காக ரூ.13,000 கோடி நிதியுடன் கூடிய இறையாண்மை கடல்சார் நிதிக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் பிரதமர் கிராம சாலைகள் (பிஎம்ஜிஎஸ்ஒய்) திட்டத்தை 2028 வரை நீட்டிக்கவும் இதற்காக கூடுதலாக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.