

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டம் சிங்தாராய் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு கடந்த 14-ம் தேதி ஒரு பெரிய பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெறுபவர்களில் ராய்ப்பூர், கல்டா மருத்துவமனையில் ஒருவரும் ராய்கர் மருத்துவக் கல்லூரியில் மற்றொருவரும் நேற்று உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
பாய்லர் வெடிப்புக்கான காரணம் குறித்து தலைமை கொதிகலன் ஆய்வாளர் அளித்துள்ள முதற்கட்ட அறிக்கையில், ‘‘பாய்லர் உலைக்குள் அதிக எரிபொருள் தேங்கியதால் அழுத்தம் வேகமாக அதிகரித்தது. இந்த அழுத்தம் ஒரு கீழ் குழாயைப் பெயர்த்தெடுத்தது. இதனால் கட்டமைப்பு தோல்வி ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்தது’’ என்று கூறப்பட்டுள்ளது.
சக்தியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகமும் இந்த காரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு மத்திய குழு விரிவான விசாரணை நடத்த உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சக்தி மாவட்ட எஸ்.பி.உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.