

குஜராத் வந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தனது வழக்கமான யோகா பயிற்சியை தவிர்த்துவிட்டு தனது சொந்த ஊரில் தாயை சந்திக்கச் சென்றார்.
இரண்டு நாள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் குஜராத் வந்தார். தலைநகர் காந்தி நகர் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அகமதாபாத் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.
பிரதமர் மோடி காலையில் யோகா பயிற்சி செய்வதை வழக்க மாகக் கொண்டவர். இந்நிலையில் நேற்று காலை யோகா பயிற்சியை தவிர்த்து விட்டு, ரைசான் கிராமத்தில் வசிக்கும் தனது தாய் ஹிராபாவை சந்திக்கச் சென்றார்.
97 வயதான ஹிராபா, ரைசான் கிராமத்தில் பிரதமரின் தம்பி பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். தனது தாயுடன் காலைப் பொழுதை செலவிட்ட பிரதமர், அவருடன் காலை உணவு சாப்பிட்டார். இத் தகவலை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
காந்திநகரில் நடைபெறும் ‘ஆற்றல்மிகு குஜராத்’ 2 நாள் சர்வதேச மாநாட்டுக்காக பிரதமர் இங்கு வந்துள்ளார். சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் இம் மாநாட்டை நேற்று பிற்பகல் அவர் தொடங்கி வைத்தார்.