Published : 09 Dec 2013 03:29 PM
Last Updated : 09 Dec 2013 03:29 PM

மக்களவையில் 2ஜி ஜேபிசி அறிக்கை தாக்கல்: திமுக வெளிநடப்பு

2ஜி அலைக்கற்றை தொடர்பான ஜே.பி.சி. அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாள்களைக் கிழித்தெறிந்து திமுக வெளிநடப்பு செய்தது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிக்கையை, மக்களவையில் ஜே.பி.சி. தலைவர் பி.சி.சாக்கோ இன்று தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவைக் குற்றம்சாட்டும் அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் உடனடியாக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதேவேளையில், பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா, ஹிரின் பதக், மார்க்சிஸ்ட் கட்சியின் குருதாஸ் தேஸகுப்தா, திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி ஆகியோர், அந்த அறிக்கையை மோசடியானது என்று குறைகூறி குரல் எழுப்பினர்.

பின்னர், அவைக்கு மீண்டும் வந்த திமுக உறுப்பினர்கள், அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில தாள்களைக் கிழித்து, மக்களைவத் தலைவர் முன்பு வீசியெறிந்தனர். அதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான ஜேபிசி (நாடாளுமன்றக் கூட்டுக் குழு) அறிக்கை முழுமையற்றது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. ஜே.பி.சி. அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் எழுத்துப்பூர்வ விளக்கமும் சேர்க்கப்பட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நற்சான்று வழங்குவதால், அந்த அறிக்கைக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x