

முஸ்லிம்கள் ஆண்டுதோறும் உருசு எனப்படும் சந்தனக்கூடு திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்த முறை 805-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் நேற்று போர்வை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, போர்வையை தர்கா நிர்வாகி களிடம் வழங்கினார். பின்னர், பிரதமர் மோடியின் கடிதத்தை அங்கு வாசித்தார். மோடி தனது செய்தியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சூபி ஞானி காஜா மொய்னுதீன் சிஸ்டியைப் பின்பற்றி வரும் முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குபவர் சூபி ஞானி காஜா மொய்னுதீன் சிஸ்டி’’ என்று தனது கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நக்வி பேசும் போது, ‘‘ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச் சிறந்த சூபி ஞானி கரிப் நவாஸ் ஏழைகளுக்கு செய்த பணிகள் பல தலை முறைகளுக்கு ஊக்கசக்தியாக இருக்கும். உலக அமைதிக்காக அவர் கூறிய கருத்துகள், மனித பண்புகளை காக்கும் பலமுள்ள ஆயுதமாக விளங்குகிறது’’ என்று புகழாரம் சூட்டினார். (மொய்னு தீன் சிஸ்டியின் மற்றொரு பெயர் கரிப் நவாஸ்).