

காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டபோது எதிர்க்கட்சிகள், தேசிய கீதத்தை அவமதித்ததற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் என்.என்.வோரா உரையாற்ற இருந்தார். ஆனால், காஷ்மீரில் தொடரும் வன்முறை பிரச்சினைகளை முன்வைத்து, ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாமல் அமளி நீடித்ததால், ஆளுநர் வோரா, தனது உரையை அவசரமாக முடித்துக்கொண்டு வெளியேறினார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ரவிந்தர் ரெய்னா கூறும்போது, ‘ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசிய கீதம் ஒலித்த சமயத்தில் கூட, தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருந்தனர். தேசிய கீதம் ஒலிக்கும்போது, ஆளுநரும் வெளியேறினார். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். இதற்காக காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகளும், ஆளுநரும் மன்னிப்பு கோர வேண்டும்’ என்றார்.
காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்த நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத ஆளும் கூட்டணி அரசை பேரவையில் தனிமைப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் வெகுவாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் குலாம் அகமது மிர் கூறும்போது, ‘அனைத்து மட்டங்களிலும் அரசு தோல்வியை சந்தித்திருக்கும் இந்த சூழலில், அரசிடம் கேள்விகளை முன்வைக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. மக்கள் சார்பில் பதிலை கேட்டு வாங்க வேண்டிய கடமையும் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது’ என்றார்.