

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2015 மார்ச் 2-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மலேசிய தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குரூப் உயர் அதிகாரி அகஸ்டஸ் ரேல்ஃப் மார்ஷல் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர சன் டைரக்ட் உள்பட 4 நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கூறியதாவது, "சிபிஐ தாக்கல் செய்த எப்.ஐ.ஆர், குற்றப்பத்திரிகை, சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை கூர்ந்து கவனித்தேன். தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கை தொடர போதிய ஆதாரங்கள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதன் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிக்கிறேன்" என்றார்.
நீதிபதி சைனியின் சம்மன் உத்தரவு இரண்டு பக்கங்களில் இருந்தது.
தொடர்ந்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே.கோயல் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்மன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களில் ஐவர் மலேசியா, மொரிசியஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வாழ்வதால் அவர்கள் சம்மனை பெற்று இங்குவர கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதி சைனி, சம்மன் அளிக்கப்பட்டவர்கள் ஆஜராக 4 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந்நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்தது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஐ, இந்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மாறன் சகோதரர்கள் தவிர மேலும் 6 பேர் மற்றும் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் உட்பட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. 6 தனிநபர்கள் தவிர சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது சாட்டப்பட்டுள்ளன.
இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையின்போது, 'ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என்று சிபிஐ தரப்பு வாதிட்டது. இதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
'கடந்த 2004-06 காலகட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமங்களுக்கான விண்ணப்பங்களை காரணமே இன்றி நிலுவையில் வைத்தார். அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து, அதன் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. நிறுவனம் கைமாறிய பிறகு உரிமம் வழங்கப் பட்டது. இதில் பாதிக்கப்பட்டது சிவசங்கரன்தான்' என்று சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.