கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி- 64 குழந்தைகள் காயம்

கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி- 64 குழந்தைகள் காயம்
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே நிகழ்ந்த லாரி கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் இறந்தனர். மேலும் 64 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், அஞ்சனகேரி பகுதியில் உள்ள மதரஸா உருது பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரபிக் மொழி பயின்று வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை காலை 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே உள்ள புகழ்பெற்ற சதோஷ் சஹீது தர்காவுக்கு லாரியில் சென்றுள்ளனர்.

சுற்றுலா முடிந்து இரவு இவர்கள் வீடு திரும்புகையில் தம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 3 குழந்தைகள் அதே இடத்தில் இறந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், இடிபாடு களில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டு ஹூப்ளி, தார்வார் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் வழியிலேயே இறந்தனர்.படுகாயமடைந்த 64 குழந்தைகள் ஹூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக தார்வார் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதிக வேகத்தில் லாரியை ஓட்டியதால் விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ளது. விபத்தை தொடர்ந்து தலைமறைவான லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய மதரஸா பள்ளி லாரியில் மொத்தம் 130 பேர் இருந்துள்ளனர். இதில் 125 பேர் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள். 3 பேர் ஆசிரியர்கள். 2 பேர் பள்ளி ஊழியர்கள். விபத்தில் சிக்கிய மாணவர்களில் பெரும்பாலானோர் ஹூப்ளியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in