Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

செம்மரக் கடத்தல்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - ஆந்திர வனப்பகுதியில் மீண்டும் பதற்றம்

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை, போலீஸார் மீது செம்மரக் கடத்தல்காரர்கள் கற்களை வீசித் தாக்கினர். அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

திருப்பதி, சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் இரு வனத்துறை அதிகாரிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் செம்மரக் கடத்தல் கும்பலைத் தேடி காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் ஆயுதம் தாங்கிய 17 குழுவினர் வனப்பகுதியில் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். நேற்று பாகராபேட்டை அருகே ரோந்து பணியில் இருந்த ஒரு குழுவினர், அப் பகுதியில் சிலர் செம்மரம் கடத்திச் செல்வதைக் கண்டு அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற கடத்தல் கும்பல், ரோந்து குழு மீது கற்களை வீசி தாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்களை சரணடையுமாறு எச்சரித்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திள்ளனர். அதிலிருந்து தப்பிய செம்மரக் கடத்தல்காரர்கள், அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் தப்பியோடி விட்டனர். வனத்துறையினர் படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் மீண்டும் வனத்துறை – காவல் துறை இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடத்தல்காரர்களுடன் மோதல் ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x