

தாத்ரி படுகொலை வழக்கில் கைதானவர்களின் குடும்பத்தார் சார்பில் ‘மகா பஞ்சாயத்து’க்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் பிசாடா கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிசாடா கிராமத்தில், மாட்டிறைச்சி உட்கொண்டதாகக் கூறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முகமது இக்லாக் என்பவரை கிராமமக்கள் அடித்துக்கொன்றனர். இதுதொடர்பாக, 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
படுகொலை செய்யப்பட்ட இக்லாக்கின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியின் மாதிரி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மதுராவில் உள்ள ஆய்வகம் இதை ஆய்வு செய்து, இக்லாக்கின் வீட்டில் இருந்தது, மாட்டின் இறைச்சிதான் என கடந்தவாரம் உறுதிசெய்தது.
இதைத்தொடர்ந்து இவ்விவகாரத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் வீட்டில் மாட்டை வெட்டி அதன் இறைச்சியை வைத்திருந்த இக்லாக் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவேண்டும் என காவல்துறையை கிராமமக்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.
‘இக்லாக் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது போல, சட்டத்துக்கு புறம்பாக மாட்டை வெட்டி அதன் இறைச்சியை வைத்திருந்த இக்லாக்கின் குடும்பத்தார் மீது வழக்கு பதிந்து கைது செய்யவேண்டும். சட்டப்படி தண்டனை வழங்கவேண்டும். அவர்களுக்கு அரசு அளித்த நிவாரணங்களையும் திரும்பப்பெற வேண்டும்’ என கிராமமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 144 கிராமங்களைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்தினரை ஒன்று கூட்டும் ‘மகா பஞ்சாயத்து’க்கு பிசாடா கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். எனினும், இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
பிசாடாவில், 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 144 தடை உத்தரவை கவுதம்புத் நகர் மாவட்ட ஆட்சியாளர் என்.பி.சிங் பிறப்பித்துள்ளார். இதனால், பிசாடா கிராமம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று பதற்றமான சூழல் நிலவியது.