பாகிஸ்தானிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக புகார்: காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் கிலானி மருமகனிடம் என்ஐஏ விசாரணை

பாகிஸ்தானிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக புகார்: காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் கிலானி மருமகனிடம் என்ஐஏ விசாரணை
Updated on
1 min read

காஷ்மீரில் போராட்டம் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு களிடம் இருந்து நிதியுதவி பெற்றது தொடர்பாக பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷாவிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

அண்மையில் ஸ்ரீநகரில் உள்ள அல்டாப்பின் வீடு மற்றும் பிற இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தவிர ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் மிர்வாய் உமர் பரூக்கின் நெருங்கிய கூட்டாளியான ஷாஹித் உல் இஸ்லாம், தொழிலதிபர் ஜஹுர் வாடாலி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது பாகிஸ்தானிடம் இருந்து நிதியுதவி பெற்றது தொடர்பான சில ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதவிர கணக்கில் வராத ரூ.2 கோடி ரொக்கம், லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் கடிதங்கள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களது வங்கிக் கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன.

இதையடுத்து அல்டாப் அகமது ஷாவை விசாரணைக்கு ஆஜராகும்படி என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்தில் அல்டாப் நேற்று விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் வரை விசாரணை நடத்திய தாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in