விமானப் படையின் முயற்சியால் திருமலை வனப்பகுதி காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டது

விமானப் படையின் முயற்சியால் திருமலை வனப்பகுதி காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டது
Updated on
1 min read

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக பரவிய காட்டுத் தீ, இந்திய விமானப்படை வீரர்களின் உதவியோடு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி கோருட்லா, காகுலகொண்டா உள்ளிட்ட காட்டுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் மரங்கள் தீயில் கருகின.

வனத்துறை அதிகாரிகள், தேவஸ்தான ஊழியர்கள், தீயணைப்பு படையினர் ஆகியோர் இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த பணியில் சுமார் 300 ஊழியர்கள் 10 டேங்கர்களுடன் தீயை அணைக்க போராடினர். காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனால் நிலைமையை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது.

இதனால் மலைவழிப் பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பாபவிநாசம், ஆகாச கங்கை போன்ற இடங்களுக்கு செல்லும் வழிகளும் அடைக்கப்பட்டன.

தீயை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மத்திய அரசு சார்பில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள், கடற்படை, தரைப்படை ராணுவ வீரர்களும் விரைந்து இன்று(வியாழகிழமை) காலை மேற்கொண்ட வான்வழி ஆய்வை அடுத்து, தீயை அணைக்கும் முயற்சி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் ராட்சத வாளிகள் இணைக்கப்பட்டு,அதன் மூலம் சுமார் 3000 லிட்டர் தண்ணீர் வனப்பகுதில் பீய்த்து அடிக்கப்பட்டது. இதற்காக குமாரதாரா மற்றும் பசுபுதாரா அணைகளிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

காட்டுப்பகுதியில் ஏற்பட்ட அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகளை கட்டுப்படுத்த இரசாயனமும் ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in