

ஹரியாணா மாநிலம் பல்லப்கார் அருகே ஓடும் ரயிலில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி-மதுரா பயணிகள் ரயிலில் பல்லப்கார்-மதுரா ரயில் நிலையங்களிடையே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தகராறில் முஸ்லிம் சகோதரர்கள் 3 பேர்களில் ஒருவர் கத்திக்குத்தில் பலியாக இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஜுனைத் (17), ஹசிம் (21), சகீர் (23) ஆகியோருக்கும் சில பயணிகளுக்கும் இடையே ரயிலில் இருக்கை குறித்து தகராறு மூண்டது. அப்போது இவர்களுடன் சண்டைபிடித்த 10 பயணிகளில் சிலர் இந்த மூவர் மீதும் வாய்க்கு வந்தபடி வசைபாடியுள்ளனர். மூவரும் முஸ்லிம்கள் பரிதாபாத்தின் கந்தவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், என்றார்.
தகராறில் பயணி ஒருவர் முஸ்லிம் சகோதரர்களில் ஒருவரைக் கத்தியால் குத்தியுள்ளார் இதில் ஜுனைத் (17) பலியானார். இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்றார் போலீஸ் அதிகாரி. ஹசிம், சகீர் இருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சகீர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறும்போது, “எங்களை பாகிஸ்தானியர்கள் என்றும் பசுமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றும் ஏசினர்” என்றார்.