டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து பாஜக முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்

டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து பாஜக முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், அங்கு பாஜக-வை ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியானது.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இவ்விவகாரத்தில் கட்சி மேலிடம் தகுந்த முடிவு எடுக்கும். எனக்கு, டெல்லி துணை நிலை ஆளுநரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை" என்றார்.

முன்னதாக, ராஜ்நாத் சிங்கை, டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளர் நிதின் கட்கரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி: டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக ஒருபோதும் குதிரைபேரத்தில் ஈடுபடாது. ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவருமே, அதிகப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும் எனவே விரும்புகின்றனர் என கூறினார்.

டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. இதனால், டெல்லி அரசு கலைக்கப்பட்டது. மறுதேர்தல் அறிவிக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in