

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளிக்க உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சீராய்வு மனுக்கள் மீதான வாதங்கள் முடிந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்த, நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநலன் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தநிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜராகிய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சீராய்வு மனுக்களை தொடக்க நிலையையே தள்ளுபடி செய்யவேண்டும், சில ஆவணங்கள் திருடப்பட்டு தி இந்து(ஆங்கிலம்) நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
பின்னர், பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அதிகாரபூர்வமற்ற வகையில் நகல் எடுக்கப்பட்டு நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது என்று வேணு கோபால் அடுத்த கட்ட வாதத்தில் தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் தேச பாதுகாப்புக்கு உகந்தவை, போர்விமானத்தின் தன்மையை விளக்குபவை என்பதால், அதை வெளியிடக்கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் வாதத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜோஸப், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி இந்த ஆவணங்களை வெளியிட்டத்தில் எந்தவிதமான பிரச்சினை இருப்பதாகவும் தெரியவில்லை. பொதுநலன் கருதி வெளியிடலாமே என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சீராய்வு வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்த, நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது.