

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.
கேரள மாநிலம் முழுவதும் இன்று விஷூ பண்டிகை(புத்தாண்டு) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கோயிலில் துலாபாரம் வழங்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திருவனந்புரம் தொகுதி எம்.பி.சசிதரூர் முடிவு செய்தார்.
தம்பனூரில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலுக்கு இன்று காலை வந்த எம்.பி. சசிதரூர் தனது எடைக்கு எடையாக துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கச் சென்றார். சசிதரூருடன் அவரின் குடும்பத்தார், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில் சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கிய நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் தராசில் அமர்ந்திருந்த சசிதரூர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சசி தரூரின் கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் ரத்தமானது.
இதையடுத்து உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சசிதரூர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, தலையில் 6 தையல்கள் போட்டுள்ளனர். தற்போது சசிதரூர் இயல்பாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துலாபாரம் முடிந்த பின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சசிதரூர் முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.