

நடப்பு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெறுவதில் தோல்வி அடைந்து விட்டால் சந்திரபாபு நாயுடு, மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் ஆவதற்குத் தகுதியானவர்களே என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதற்கு சரத் பவார் கூறும் தர்க்கம் இதோ: குஜராத்தில் முதல்வராக இருந்துதான் நரேந்திர மோடியும் பிரதமராகியுள்ளார். தேஜகூ இம்முறை அறுதிப்பெரும்பான்மை எடுப்பது சாத்தியமில்லை என்பதால் சந்திரபாபு நாயுடு, மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகிய மூவரில் ஒருவர் பிரதமராவதற்குத் தகுதி படைத்தவர்களே என்று ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் பவார்.
ஏதோ ஒரு டிவி சானல் பேட்டியில் ராகுல் காந்தியை விட இவர்கள் மூவர்தான் பிரதமர் பதவிக்குத் தகுதியுடையவர்கள் என்று சரத் பவார் கூறியது பற்றி அவரிடம் கேட்ட போது, ராகுல் காந்தியே பலமுறை தான் பிரதமர் பதவிப் போட்டியில் இல்லை என்றுதான் கூறி வந்துள்ளார். ஆகவே இதில் விவாதத்துக்கு ஒன்றுமில்லை என்றார்.
நாயுடு, சரத் பவாரை ஒரு வாரம் முன் சந்தித்தபோது, தனக்கு பிரதமர் எண்ணமெல்லாம் இல்லை, பாஜகவை தோற்கடிப்பதே முதற்கண் குறிக்கோள் என்று கூறினார்.
சரத் பவார் மேலும் கூறிய போது, “பாஜக இம்முறை மொத்தம் ஏறக்குறைய 100 இடங்களை இழந்து விடும். தேஜகூ தெளிவான பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. பிரதமர் பதவிக்கு புதிய தெரிவுகளை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது, ஆகவேதான் இந்த மூவர் பெயரையும் கூறுகிறேன்” என்றார்.
மோடிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பெரிய கடமை சரத் பவாருக்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் நம்பப்படுகிறது.