350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள்தான் கூறின: வைரலான மத்திய அமைச்சரின் பேச்சு

350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள்தான் கூறின: வைரலான மத்திய அமைச்சரின் பேச்சு
Updated on
2 min read

எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல என்று மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா பேசிய வீடியோவை சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சிபிஎம் கட்சி கொல்கத்தாவில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பாலாகோட் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்ற தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் அவர் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் அவர் பேசியது தெரியவந்துள்ளது.

அப்போது மத்திய அமைச்சர் பேசிய விவரம் வருமாறு:

''எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல.

இந்திய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் மோடி கூறியதாக சில தகவல்களை வெளியிட்டன. பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஆனால் அக்கூட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

நான் கேட்கிறேன், பிரதமர் மோடியோ, அல்லது எந்த அரசாங்க செய்தித் தொடர்பாளரோ அல்லது எங்களுடைய கட்சித் தலைவர் அமித் ஷாவோ பாலாகோட் தாக்குதலில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா?

பாலாகோட் தாக்குதலின் நோக்கம், தேவைப்பட்டால் பாகிஸ்தானின் கொல்லைப்புறத்திற்கே சென்று தாக்கி அழிக்க முடியும் என்ற செய்தியை அனுப்புவதற்குத்தானே தவிர, எந்த ஒரு உயிரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்கானதல்ல. அப்படி யாரையும் கொல்லவும் இல்லை.''

இவ்வாறு அலுவாலியா பேசிய வீடியோவை வெளியிட்ட சிபிஐ (எம்), உடன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது

''அப்படியெனில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம் தகர்த்ததாக தெரிவித்திலிருந்து பின்வாங்குகிறதா அரசு?'' என்ற கேள்வியையும் அதில் எழுப்பியுள்ளது.

அலுவாலியாவின் பதில்

அரசு அதிகாரிகளோ, எந்த ஒரு அமைச்சரோ இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்ற அமைச்சர் பேசியுள்ள வீடியோ குறித்து கருத்து கேட்க அவரை பிடிஐ தொடர்பு கொண்டபோது,

''300- 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்த இந்திய ஊடகங்கள் சொல்வதுதான் சரி என்று நான் சொல்லவேண்டுமா அல்லது அரசாங்கம் சொல்வதை நான் ஆதரிக்கவேண்டுமா? என்றுதான் நான் கேட்டேன். அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் சொல்லமுடியும். ஊடகத்தினர் சொல்வதெற்கெல்லாம் நான் எவ்வாறு உறுதி அளிக்க முடியும்''.

இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

மம்தா பானர்ஜி கேள்வி

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மோடி அரசாங்கத்தை விமானத் தாக்குதலுக்கு எதிராக கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரின் இந்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகம்மது பயிற்சி முகாம்களில் இந்திய வான்வழித் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரத்தை மம்தா பானர்ஜி வியாழன் அன்று கோரியிருந்தார். மேலும் அதிரடித் தாக்குதல் குறித்த விவரங்கள் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in