நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ரூ.1,157 கோடி செலவிட்ட நிதி அமைச்சகம்: சிஏஜி அறிக்கையில் தகவல்

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ரூ.1,157 கோடி செலவிட்ட நிதி அமைச்சகம்: சிஏஜி அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கடந்த 2017-18-ம் ஆண்டில் நிதி அமைச்சகம் ரூ.1,157 கோடி கூடுதலாக செலவு செய்துள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2017-18-ம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்ததில், நாடாளுமன்றத்தின் முன்-ஒப்புதல் இல்லாமல் ரூ.1,156.80 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாகச் செலவிட்டதற்கு எந்தவிதமான பொருத்தமான சேவையையோ அல்லது புதிய செயல்பாடு குறித்த திட்டமிடலோ நிதி அமைச்சகத்திடம் இல்லை. நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செலவினத்துக்கு முன்கூட்டியே நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் பெற தவறிவிட்டது.

பொதுக் கணக்குக் குழுவின் 83-வது அறிக்கையில்கூட மானியங்கள், உதவித்தொகை அளித்தது குறித்து குறிப்பிட்டு இருந்தது. அதில் அமைச்சகங்கள், துறைகள் நிதித்துறை விதிகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை, தவறான பட்ஜெட் கணக்கீடுகளை அளித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற தீவிரமான நிதிக் குறைபாடுகள் நிகழாமல் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் தவிர்க்க வேண்டும். நிதி அமைச்சகம் நிதிஒழுங்கை கடைபிடிக்க சிறப்பான முறைகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in