

பருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என்று சமீபத்தில் வந்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
International Centre for Integrated Mountain Development ஆசிரியர்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, ”தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது இவ்வாறே தொடர்ந்தால் இமய மலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும் நிலை ஏற்படும்.
மேலும் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால் இமய மலை பிராந்தியத்தை சுற்றி உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் பருவ நிலை மாற்றம் சார்ந்து மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள இருக்கின்றன. இதனவிளைவு மிகத் தீவிரமாக உள்ளது. இது கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை அளித்த ஆசிரியர்களில் ஒருவரான பிலிப்பஸ் வெஸ்டர் கூறும்போது, ”பருவ நிலை மாற்றத்தை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவை. நாம் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்.
நம்மால் இதனை தடுக்க முடியும் என்று நான் கருதுகிறேன். நாம் அன்றாட வேலை காரணமாக நாம் இதுபோன்ற கதைகளை கேட்க தயாராக இல்லை. நம்மிடம் தொழில் நுட்பம் உள்ளது. நம்மால் பசுமை இல்ல வாயுகளின்(Green House Gases) வெளியேற்றத்தை குறைக்க முடியும். இதனை தடுக்க நாட்களோ, வருடங்களோ இல்லை. நாம் இன்றிலிருந்து செயலாற்ற வேண்டும் ” என்றார்.