

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் வனப்பகுதி சாலையில், பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை, மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில், கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஜல்பைகுரி மாவட்டம், கருமரா வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31-ல் நேற்று நடந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின் மனை டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும் பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று திரும்பினார்கள்.
அப்போது, வனப்பகுதியில் மையத்தில் நெடுஞ்சாலை இருபகுதிகளாகப் பிரியும். அந்த இடத்துக்கு அருகே வந்தபோது, பெரிய யானைக்கூட்டம் சாலையைக் கடந்துள்ளது. நிதுகோஷ் தான் வந்த பைக்கை நிறுத்திவிட்டு, சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை குடும்பத்தாருடன் நின்று ரசித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் வரிசையாக நின்றன.
அப்போது, யானைகள் அனைத்தும் சாலையைக் கடந்து சென்றுவிட்டதாக நினைத்து நிதுகோஷ் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். பைக்கில் புறப்பட்டபோது, மீண்டும் ஒரு யானைக் கூட்டம் திடீரென சாலையைக் கடந்துள்ளது.
இதைப் பார்த்த நிதுகோஷ் திடீரென தனது பைக்கை பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக் கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, பைக்கில் இருந்த நிதுகோஷ் அவரின் மனைவி, மகள் அஹானா ஆகியோர் கீழே விழுந்தனர்.
அப்போது, சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை மற்ற யானைகள் ஏதும் அந்த சிறுமி அஹானாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக, திடீரென பின்னோக்கி நகர்ந்துவந்து, அந்த சிறுமியை தனது 4 கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது. இதைப் பார்த்த மற்ற யானைகள், ஆவேசமாக வந்தும், இந்த யானையின் செயலைப் பார்த்து திரும்பிச் சென்றன.
அதன்பின், சாலையில் நிதுகோஷுக்கு பின்னால் இருந்த லாரியின் டிரைவர் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பவே, சிறுமியை மிதித்துவிடாமல் மெதுவாகக் காலை எடுத்துவைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.
அங்கிருந்து செல்லும் போது சத்தமாகப் பிளிறிக்கொண்டு, அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றது. அதன்பின் அனைவரும் ஓடிவந்து நிதுகோஷ் அவரின மனைவி, மகள் அஹானா ஆகியோரைக் காயங்களுடன் மீட்டு ஜல்பைகுரி மருத்துவமனையில் சேர்த்தனர். பைக்கில் இருந்த விழுந்த 3 பேருக்கும் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது, யானையின் கால்களுக்கு இடையே இருந்தால், சிறுமி அஹானா மட்டும் சிறிது மிரட்சியுடன் காணப்பட்டார்.
இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.
கருமரா வனச்சரக ரேஞ்சர் அயன் சக்ரவர்த்தி கூறுகையில், " யானைகளை சாலையைக் கடப்பது இங்கு வழக்கமாக இருக்கிறது. அப்போது சாலையில் இருக்கும் வாகன ஓட்டிகளிடம் எச்சரித்துவிடுவோம். ஆனால், யானைகள் பெரும்பாலும் தாமாக யாரையும் கொல்வதில்லை. தங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை மட்டுமே தாக்கும்" எனத் தெரிவித்தார்