

நெடுஞ்சாலையில் 500 பேருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இயக்கி உத்தரப் பிரதேச மாநில அரசு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அபுதாபியில் 350 பேருந்துகள் ஒரு ஊர்வலத்தில் கலந்துகொண்டு சென்ற சாதனை தற்போது வரை உலக சாதனையாக உள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்த ஊர்வலத்தில் ஒரே வரிசையாக ஊர்ந்துசென்ற 500 பேருந்துகள் 3.2 கி.மீ.தொலைவுக்கு நீண்டு பழைய சாதனையை இது முறியடித்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இங்கு திருவிழாவுக்கு பல்வேறு வாகனங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் கலந்துகொள்ள வருகை தந்தனர்.
பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) அருகே சாஹ்சன் சுங்கச் சாவடிக்கும் நவாப்கஞ்ச் சுங்கச் சாவடிக்கும் இடைப்பகுதியில் உள்ள என்எச்-19 நெடுஞ்சாலையில் குங்குமப்பூ நிற வண்ணத்தைக் கொண்ட இப்பேருந்துகள் ஊர்வலத்தில் சென்றன.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில கூடுதல் தலைமை செயலாளர் (தகவல் மற்றும் சுற்றுலா) அவானிஷ் குமார் அவஸ்தி ஐஏஎன்எஸ்ஸிடம் பேசியதாவது:
இந்த பேருந்து அணிவகுப்பு ஊர்வலம் ஒரு புதிய போக்குவரத்து திட்டத்தை பொதுமக்களிடையே கொண்டுவரும் எண்ணத்தோடு உருவாக்கப்பட்டது ஆகும். இத்திட்டம் கும்ப மேளாவில் நன்றாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது.
கும்ப்நகரில் நடைபெற்ற திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணியில் 20 ஆயிரம் போலீஸ்கள் குவிக்கப்பட்டனர். இந்து மதத்தின் மாபெரும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். அங்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 1,300 ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்பட்டது,
அச்சமயம் இத்தகைய புதிய போக்குவரத்து நடைமுறையினால் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, எளிமையாக பார்க்கிங் செய்யும் வசதி உருவாக்கப்பட்டது.
இவ்வாறு உபி அரசின் கூடுதல் அரசு செயலாளர் தெரிவித்தார்.