

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு தடை விதிக்க கோரி தமிழக கடந்த ஆண்டு இறுதியில் உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் , தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதியன்று, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், கர்நாடக அரசின் பதில் மனு மற்றும் அதன் விரிவான திட்ட அறிக்கைக்கு 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ''கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி கர்நாடக அரசு தாக்கல் செய்த முதல்கட்ட திட்ட அறிக்கையின்படி, மேகேதாட்டு அணையின் கொள்ளளவு 67.16 அடி எனவும், அதில் 27.64 அடி நீர் ஜூன் முதல் அக்டோபர் வரை பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீரைப் பயன்படுத்தும் காலத்தை பார்க்கும் போது, அந்த நீர் பாசனத்துக்காகவே பயன்படுத்தப்பட இருப்பது தெளிவாகிறது. இதனால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணை கட்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, மேகேதாட்டு அணை திட்டமானது, காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என தெரியவருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கர்நாடக அரசு நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ''தமிழக அரசு மேகேதாட்டு திட்டத்தின் உண்மை நிலையை அறியாமல் எதிர்க்கிறது. எனவே மத்திய நீர்வளத்துறையில் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் இந்த மனுவுடன் இணைத்திருக்கிறோம். இவ்வழக்கை விசாரிக்கும் போது விரிவான திட்ட அறிக்கையை பரீசிலிக்க வேண்டும்''என கோரியுள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பிப்ரவரி 2-ம் வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.