

தேன் குடிக்கும் குள்ள நரி என்ற பதப்பிரயோகம் தமிழில் புகழ் பெற்றதாகும். அத்தகைய அரிய நரி வகையறாவை இப்போது கர்நாடகாவில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் கேமராவில் படம் பிடித்துள்ளனர்.
தென் மாநிலங்களில் இத்தகைய நரி பற்றிய விவரங்களும் அது இருக்கு இடம் பற்றியும் சில பதிவுகளே உள்ளன. இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972-ன் படி பாதுகாக்கப்படவேண்டிய வனவிலங்குகள் பட்டியலில் உள்ளது,
கர்நாடகா வனப்பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அறுதியிடவதற்காக ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்காக 961 சதுர கிமீ வனப்பகுதியில் இன்ஃப்ரா ரெட் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதில் 41 படங்கள் பதிவாகியதில் 7 படங்களில் இத்தகைய அரிய நரி வகையில் படங்களும் அடங்கும்.
இந்த ஆய்வை மேற்கொண்ட இயற்கைப் பராமரிப்பு அமைப்பைச் சேர்ந்த சஞ்சய் குப்பி என்பவர் இது பற்றிக் கூறுகையில் தேன் குடிக்கும் குள்ள நரிகளின் படங்கள் பெரும்பாலும் இரவில் பிடிக்கப்பட்டவையே. அவை வித்தியாசமான வாழ்விடங்களில் இருப்பவை என்றார்.
அவை வசிக்கும் இடங்களை ஆராய்கையில் சத்தியமங்கலம் வனப்பகுதிகளிலும் இவை அதிகம் இருக்கலாம் என்கிறார் அவர்.
கடந்த காலங்களில் தேன் குடிக்கும் குள்ள நரிகள் அவ்வளவாக படங்களில் சிக்காது, அதனைக் காண்பதும் அரிது என்று கூறிய சஞ்சய் தற்போது இது சகஜமாக தென்னிந்திய காடுகளில் காணப்படும் ஒன்று என்றே தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.