

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் போர் விமானக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்த விசாரணையும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 14-ம் தேதி அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சீராய்வு மனுவை முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநலன் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், “ பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் நீதிமன்றத்துக்கு இல்லை.
போர் விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை. மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம்’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பாகக் கடந்த 14-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் அரசு சீலிடப்பட்டு வழங்கியுள்ள கவரில் தவறான விவரங்கள் தரப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.