தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீர் விலகல்: சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுப்பு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீர் விலகல்: சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுப்பு
Updated on
2 min read

சிபிஐ இடைக்கால இயக்குநரான நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்ய வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று திடீரென்று அறிவித்தார்.

சிபிஐ புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

புதிய சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யும் குழு வரும் 22-ம் தேதி கூடுகிறது. இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி யாரேனும் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவியதால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது.

அதையடுத்து அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி முழுப்பொறுப்புடன் புதிய இயக்குநரைத்தான் நியமிக்க முடியும், சிபிஐக்கு இடைக்கால இயக்குநர் என ஒருவரை நியமிக்க முடியாது. நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவும், நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தார்

மேலும், சிபிஐ இயக்குநர் தேர்வில் வெளிப்படைத்தன்மையும், தேர்வு செய்யப்படுவோரையும், நியமன்தையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவர்களின் தகுதியையும் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 21 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்கும் குழுவில் இருந்து தான் விலகுவதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யும், பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழுவில் தானும் இடம் பெற்று இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க இயலாது. இந்த மனு வரும் 24-ம் தேதி வேறு அமர்வில் விசாரிக்கப்படும் என ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in