

இந்தியாவில் உள்ள நேபாள மக்கள், இந்திய ரூபாயில் மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய தடை விதித்து நேபாள அரசு நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேபாள மக்கள் ரொக்கப் பணமாகவோ, கிரெடிட், டெபிட் கார்டுகளிலும் ரூ. ஒரு லட்சத்துக்கு அதிகமாகச் செலவு செய்ய முடியாது.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள உயர் மதிப்பு கரன்சிகளான ரூ.2000, ரூ.500, ரூ.200 ரூபாய்களுக்கு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அதேசமயம் ரூ.100 மட்டுமே பயன்படுத்த அனுமதித்த நிலையில், இப்போது இந்த உத்தரவையும் பிறப்பித்துள்ளது நேபாள அரசு.
இதனால், இந்தியாவில் வசிக்கும் நேபாள மக்கள், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் வர்த்தக ரீதியாக, படிப்புக்காக வரும் நேபாள மக்கள், சேவைகள், பொருட்களைப் பெறுவதில் பெரும் சிரமங்களைச் சந்திப்பார்கள். மருத்துவ சிகிச்சையில் இருந்து மட்டும் இந்த உத்தரவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் நடப்புக் கணக்குப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதால், அதைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த மூத்த பொருளாதார அறிஞர்கள் கூறுகையில், “ பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்புதான் நேபாளத்தில் சிக்கல் ஏற்படத் தொடங்கியது. அதனால்தான் எப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை நேபாள அரசு எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.
நேபாள ரிசர்வ் வங்கியின் செய்தித்தொடர்பாளர் நராயன் பிரசாத் படேல் கூறுகையில் “ நேபாள அரசின் நடப்புக்கணக்குப்பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கவும், வரவுசெலவு சமநிலையின்மை பிரச்சினையைக் கையாளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
காத்மாண்டு நகரைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் அச்யுத் வாக்லே கூறுகையில் “ பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேபாளத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிட்டது. இந்தியப் பணத்துக்கும் அந்நாடு பொறுப்பேற்கவில்லை. இதனால், இந்திய அரசின் எதிர்கால நடவடிக்கை எதிராக தங்களை பாதுகாக்கும் முயற்சியாகவே நேபாள அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இந்த முடிவை இந்திய அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் நேபாள அரசு எடுத்துள்ளது. நேபாள அரசு தங்களின் கரன்சி மதிப்பைக் கட்டுக்குள் வைக்க இந்த முடிவை எடுத்துள்ளது. மீண்டும் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டால் அதிலிருந்து தங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு” எனத் தெரிவித்தார்.
பொருளாதார வல்லுநர் பாடெல் கூறுகையில், “ பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நேபாளத்தில் இருந்த இந்திய ரூபாயை திரும்பப் பெறுவது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை இல்லை. பெரும்பாலான நேபாள மக்கள் இந்திய பணமதிப்பில் சேமிப்புகளை வைத்திருந்தனர். ஆதலால், எதிர்காலத்தில் இந்தியாவின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே இந்த நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்தியாவில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார்.
அதன்பின் நேபாளத்தில் நவம்பர் 26-ம் தேதி அந்நாட்டில் ரூ.500, ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அந்நாட்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது.
2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், நேபாள, இந்திய அதிகாரிகள், பணமதிப்பிழப்புநேரத்தில் நேபாளத்தில் இருக்கும் செல்லாத ரூபாய்கள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.
இதற்கிடையே கடந்த 14-ம் தேதி இந்தியாவில் புழங்கும் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடைவிதித்தது. இந்நிலையில், நேற்று நேபாள நாட்டு மக்கள் ஒருவரும் இந்தியாவில் சென்று மாதத்துக்கு ரூ.ஒருலட்சத்துக்கு மேல் இந்திய மதிப்பில் செலவு செய்ய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.