

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர். அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள். படம்: பிடிஐ
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிர் பிழைப்பதற்காக முதல் தளத்தில் இருந்து கீழே குதித்த 4 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ளது அலிகஞ்ச் பகுதி. இங்குள்ள வணிக வளாகத்தில் விளையாட்டு மையம், செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை மையம், கிளினிக் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. இதன் முதல் தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பல மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில், இந்த வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில், அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதில், முதல் தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். நுழைவுவாயில் வழியாகவோ, முன்பகுதி வழியாகவோ அவர்களால் தப்பித்து வெளியேற முடியவில்லை.
ஜன்னலை உடைத்து குதித்தனர்: இதனால், பயிற்சி மையத்தின் ஜன்னல்களை மாணவர்கள் உடைத்தனர். அதன் வழியாக 7 மாணவர்கள் கீழே குதித்தனர். அதில் ஒரு மாணவன் சுற்றுச் சுவரில் விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜன்னல் வழியாக குதித்த மாணவர்களைக் காப்பாற்ற அக்கம் பக்கத்தினர் உதவினர். மாணவர்கள் முதல் மாடியில் இருந்து குதிப்பது மற்றும் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகள் வலைதளங்களில் பரவி காண்போரை பதறவைத்தது.
பயிற்சி மையத்துக்குள் மரத்தால் செய்யப்பட்ட மேஜை, நாற்காலிகள் அதிகம் இருந்ததால், தீ வேகமாகப் பரவியது. சுமார் ஒரு மணி நேரமாகப் பற்றியெரிந்த தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அனிமேஷன் மையத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்து மாணவர்கள் மீட்கும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பிறகு, பயிற்சி மையத்தில் இருந்து 15 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
விபத்து நடந்த இடத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதக் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் துணை முதல்வர் பதக் கூறியதாவது: தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும். விசாரணை அறிக்கைக்குப் பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும்.
விபத்து நடந்த இடத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, தேடும் பணி முடிந்துவிட்டது. வேறு குழந்தைகள் யாரும் உள்ளே சிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. விபத்துக்கு யாராவது காரணம் என தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘லக்னோ தீ விபத்து சம்பவத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்’என்று தெரிவித்துள்ளார்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ‘லக்னோ தீ விபத்தில் பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.