ஜம்மு காஷ்மீர் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் குழு: 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு காஷ்மீர் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் குழு: 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்ய அம்மாநில உயர் நீதிமன்ற மூத்த பதிவாளர் தலை மையிலான ஐந்து பேர் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இங்கு வெள்ள நிவாரணப் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை. மக் களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடையவில்லை என்று கூறி, வழக்கறிஞர் வசுந்தரா பதக் மசூதி, பேராசிரியர் பீம் சிங் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலின் கொன் சால்வஸ், “ஜம்மு-காஷ்மீர் மக் களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் சென்றடையவில்லை. நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ வசதிகள் சென்றடையாததால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, “மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ள நீர் வடிந்துவிட்டது. நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் விருந்தினர் மாளிகையில் இருந்து தினந்தோறும் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. நேற்று கூட இரண்டு லட்சம் போர்வைகள் அனுப்பப்பட்டன. மேலும் இந்த வழக்கை ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்” என்று வாதிட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜென ரல் கவுரவ் பச்னந்தாவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இருதரப்பிலும் முரண்பட்ட கருத்து களை தெரிவிப்பதால், உண்மை நிலையை ஆராய குழு அமைப்பது அவசியம் என்று தெரிவித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு, ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற மூத்த பதிவாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இக்குழுவில் அம்மாநில வருவாய், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை செயலர், மத்திய அரசின் பிரதிநிதி, மாநில வழக்கறிஞர்கள் சங்க பிரதி நிதிகள் இருவர் ஆகியோரும் உறுப் பினர்களாக இருப்பர். இக்குழு, ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் வெள்ள நிலவரம் குறித்த உண்மை நிலையை ஆராய்ந்து அம்மாநில உயர் நீதிமன்றத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in