Published : 05 Dec 2018 11:42 AM
Last Updated : 05 Dec 2018 11:42 AM

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் புதிய திருப்பம்: இந்தியா அழைத்து வரப்பட்டார் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்

இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் புதிய திருப்பமாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நாட்டை உலுக்கிய ஊழல் வழக்கில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதனால் பல ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார்.

ரா அதிகாரிகள் அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர். பின்னர் டெல்லி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டுவரப்பட்ட அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதைத்தொடர்நது, சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x