உத்தராகண்ட்டில் பாஜக அமோக வெற்றி

உத்தராகண்ட்டில் பாஜக அமோக வெற்றி
Updated on
1 min read

உத்தராகண்ட் மாநில உள்ளாட்சி தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது.

இதில் அங்கு மொத்தமுள்ள 7 மேயர் பதவிகளில் 5-ல் பாஜகவும் 2-ல் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. டேராடூன், ரிஷிகேஷ், காஷிபூர், ருத்ராபூர், ஹல்டுவானி ஆகியவற்றுக்கான மேயர் பதவிகளை பாஜகவும் ஹரித்துவார், கோட்தவார் ஆகியவற்றுக்கான மேயர் பதவிகளை காங்கிரஸும் கைப்பற்றியுள்ளன.

84 நகராட்சித் தலைவர் பதவிகளில் 34-ல் பாஜகவும் 25-ல் காங்கிரஸும் 23-ல் சுயேச்சைகளும் 1-ல் பகுஜன் சமாஜும் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து 39 நகர்பாலிகா தலைவர் பதவிகளில் பாஜகவும் சுயேச்சைகளும் தலா 10 இடங்களிலும் காங்கிரஸ் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சைகள் அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட 817 கவுன்சிலர் பதவிகளில் 464-ல் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். 215-ல் பாஜகவும் 132-ல் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

பாஜக மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in