

பாட்னா: மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு இரு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் பிஹார் தலைமை தேர்தல் அதிகாரி வினோத் குஞ்சால் நேற்று கூறியதாவது:
பிஹார் முதல்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2020 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 57.29% வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது 7.79% கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. பிஹார் தேர்தல் வரலாற்றில் 65.08% வாக்குகள் பதிவானது இதுவே முதல்முறை. இதற்குமுன் கடந்த 1998 சட்டப் பேரவை தேர்தலில் 64.6% பதிவாகின. இவ்வாறு அவர் கூறினார்.
பிஹாரில் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) உறுதியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்பட்ட ஊடக வெளிச்சமும் பொது ஆர்வத்தை உருவாக்கியது. மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்கத் தூண்டியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.