மே.வ ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் திரிணமூல் எம்எல்ஏ கைது - அமலாக்கத் துறை அதிரடி

மே.வ ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் திரிணமூல் எம்எல்ஏ கைது - அமலாக்கத் துறை அதிரடி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்வதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அமலாக்கத் துறை கைது செய்தது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து இன்று அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை சோதனைகளின்போது சாஹா சுவரில் ஏறி குதித்து தப்பிக்க முயன்றதுடன், வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் தனது செல்போன்களையும் வீசியுள்ளார். அப்போது சாஹாவை கைது செய்த போலீசார், அவர் வீசிய செல்போன்களையும் மீட்டுள்ளனர்.

பர்வான் தொகுதி எம்எல்ஏவான சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், எம்எல்ஏவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. முன்னதாக, ஆசிரியர் நியமன முறைகேட்டில் 2023-ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்ட சஹா அதன்பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள், 9 முதல் 12-ஆம் வகுப்பு உதவி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்துவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி, திரிணமூல் எம்எல்ஏவும், மேற்கு வங்க தொடக்கப் பள்ளி வாரியத்தின் முன்னாள் தலைவருமான மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட சிலரை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் நான்கு குற்றப்பத்திரிகைகள், அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in