

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க இருப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் மாம்பழ விளைச்சல் அதிகரித்ததால் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதனால் விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பிரஹலாத் ஜோஷி கூறும்போது, ‘‘எனது கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு விவசாயிகளின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.