பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் இடைக்கால தடை

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் இடைக்கால தடை
Updated on
1 min read

பெங்களூரு: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது போலீஸார் கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவர் ரகுராம் பாட், செயலாளர் ஏ. சங்கர், பொருளாளர் இ.எஸ். ஜெயராமன் ஆகியோர் தங்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள எப்ஐஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள், அசோக் ஹரனஹல்லி மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் ஆஜராகினர். அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சசி கிரண் ஷெட்டி ஆஜரானார். அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மார்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே தனியாக தாக்கல் செய்திருந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம் , அந்த வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூன் 9) ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in