Published : 25 May 2025 06:28 AM
Last Updated : 25 May 2025 06:28 AM
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா எம்.பி. - எம்.எல்.ஏ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை பிறப்பித்துள்ளது. மேலும், வரும் ஜூன் 26-ம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும் என்ற ரீதியில் ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது பாஜக மூத்த தலைவர் பிரதாப் கட்டியார், ஜார்க்கண்ட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய ராகுல் காந்தி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அந்த மனுவை சாய்பாசா நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 26-ம் தேதி விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT