Published : 10 May 2025 04:01 PM
Last Updated : 10 May 2025 04:01 PM
சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சண்டிகர் நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் தொகுதி சிவில் பாதுகாப்பு தன்னார்வளர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி தாகூர் அரங்கில் தொடங்கியுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் விரைவில், செக்டார் 17-ல் உள்ள திரங்கா பூங்காவில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த பயிற்சி அமர்வுக்கு சரியான நேரத்திலான உங்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானதாகும்.” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக இணைந்து, அவசரகால முன்தயாரிப்புகளுக்கு உதவும் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்களாக பதிவுசெய்ய பெரும் அளவிலான இளைஞர்கள் இன்று சண்டிகரில் திரண்டனர். தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். இது மக்களின் உணர்வுகளையும், இக்கட்டான நேரத்தில் நாட்டுக்கு சேவை செய்ய அவர்கள் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
முஸ்கான் என்ற உள்ளூர்க்காரர் கூறுகையில், “நாங்கள் ராணுவத்துக்கு ஆதரவளிக்க இங்கு வந்துள்ளோம். ராணுவத்தினர் நமக்காக அதிகம் செய்கின்றனர். நாங்களும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறோம்.” என்றார். கரண் சோப்ரா என்ற மற்றொரு நபர் கூறுகையில், “நாட்டுக்காக என் உயிரையும் தரத் தயாராக இருக்கிறேன். எங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்றார்,
சஞ்சனா அரோரா என்ற மற்றொரு உள்ளூர்வாசி கூறுகையில், “நிர்வாகத்தால் நாங்கள் இங்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வளவு இளைஞர்கள் இங்கு கூடியிருப்பதை பார்க்க வியப்பாக இருக்கிறது. இந்தியாவுக்கும், நமது ராணுவத்துக்கும் ஆதரவளிக்க பல இளைஞர்கள் இங்கு கூடியுள்ளனர்.
இங்கே நிலவும் ஆற்றல் மிகவும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக காலையில் சீக்கிரம் எழாதவர்கள் கூட அதிக அளவில் இங்கு வந்துள்ளனர். அனைவரும் எப்போது பயிற்சியில் இணைவோம் என்று காத்திருக்கின்றனர். தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் நமது ராணுவத்துடன் நிற்க நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.” என்றார்.
இந்தியா - பாக். மோதல்: நடப்பது என்ன? - கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT