Published : 10 May 2025 02:47 PM
Last Updated : 10 May 2025 02:47 PM

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது: வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட (ஜுன் 1) நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27ம் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எதிர்பார்ப்புப்படி, வரும் மே 27-ம் தேதி பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ம் ஆண்டு மே 23-ம் தேதி பருமழை தொடங்கியதற்கு பின்பு, இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதன்மையான பருவமழை வழக்கமாக ஜுன் 1-ம் தேதி கேரளாவை வந்தடையும்.

இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த 2023-ம் ஆண்டில் பருவமழை சராசரியாக, 96 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. என்றாலும் உண்மையில் அந்த ஆண்டு சராசரி அளவை விட குறைவாக 94 % மழையே பதிவாகியிருந்தது. எல் நினோவினால் அந்த ஆண்டு பருவமழை நீண்டகால சராசரி அளவான 868.6 மி.மீ. அளவை விட குறைவாக 820 மி.மீ. மட்டுமே பதிவாகியிருந்தது. 2023-ம் ஆண்டுக்கு முன்பாக தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இந்தியா சரசாரி மற்றும் சராசரிக்கும் கூடுதலான மழையை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு (2024) நீண்ட கால சராசரியை விட கூடுதலாக 108 சதவீதம் மழை பதிவாகி இருந்தது.

இந்தியாவின் மழைப் பொழிவில் 70 சதவீதம் பருவமழையால் மட்டுமே கிடைக்கிறது. பருவமழை என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கான உயிர்நாடியாகும். இந்தியாவின் விவசாயப்பரப்பில் 51 சதவீதம், அதாவது உற்பத்தியில் 40 சதவீதம் பருவமழையை நம்பியே உள்ளது. 47 சதவீதம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x